.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்'
.

Monday 29 August 2016

சர்க்காரியா

சர்க்காரியா' என்ற பெயரைக் கேட்டால் இன்றும் தி.மு.க.வினருக்கு கிலி எடுக்கும். அப்படி பயமுறுத்தும் அளவுக்கு அது யார் ர்க்காரியா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அவர் ரஞ்சித்சிங் சர்க்காரியா..! உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற திறமையான, நியாயமான நீதிபதி..!

1975 ஜூன் 15 இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். அன்றுதான் இந்திராகாந்தியால் நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 1976-ல் தி.மு.க. அரசை இந்திராகாந்தி டிஸ்மிஸ் செய்கிறார். அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையில் தி.மு.க. அரசின் ஊழல்களை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார் இந்திராகாந்தி.

நீதிபதி சர்க்காரியா ஒரு நீண்ட விசாரணையை நடத்தி தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். இந்த விசாரணை அறிக்கையும் மற்ற ஊழல் விசாரணைகளைப் போலவே கிடப்பில் போடப்பட்டது. ஆனாலும், அன்றைய தி.மு.க. ஆட்சி நிர்வாகம் எப்படி இருந்தது என்பதையும் அந்த விசாரணை அறிக்கை தெளிவாகத் தெரிவிக்கிறது.

தி்.மு.க. ஆட்சி நடத்திய லட்சணம் தெரிந்துவிடும் என்பதற்காக அந்த அறிக்கையின் நகல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. நெருக்கடி நிலையின் அத்துமீறர்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப்பட்ட ஷா கமிஷனின் அறிக்கையை இந்திராகாந்தி இது போலத்தான் ஒரு நகல் விடாமல் அழித்துவிட்டதாகத் தெரிகிறது. முன்னாள் ஜனதா கட்சித் தலைவர் செழியனின் முயற்சியால் அந்தப் புத்தகம் இப்போது புதிய வடிவில் கிடைக்கிறது. ஆனால் சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு அந்த பாக்கியமெல்லாம் இல்லை. ஏறக்குறைய அனைத்து நகல்களுமே அழிக்கப்பட்டுவிட்டது.

தி.மு.க.வின் ஆட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை குறித்து சர்க்காரியா இவ்வாறு கூறுகிறார்..

"சில முதுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தாங்கள் தவறாக நடக்கிறோம் என்று தெரிந்தே கடமையில் இருந்து தவறியுள்ளார். அமைச்சர் வாய் மொழியாகப் பிறப்பித்த கட்டளைகளை நிறைவேற்றியதைத் தவிர வேறு வழி ஏதும் தங்களுக்கு இல்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர். அமைச்சர் சார்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி லஞ்சம் வாங்கித் தரும் ஆளாக தங்களைப் பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அரசு அதிகாரிகள் அமைச்சரின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும் என்பதற்காக முறை தவறிச் செயல்பட்டிருக்கிறார்கள். அசட்டையாகவும், மெத்தனமாகவும் அஞ்சிச் சாகும் கோழைகளாகவும் உள்ள இத்தகைய அரசு அதிகாரிகளால் அதிகார வர்க்கம் முழுவதும் நேர்மை கெட்டுவிடுகிறது. அதனால் அவர்களிடம் பரிவு எதுவும் காட்ட வேண்டியதில்லை.." என்று காட்டமாகக் குறிப்பிடுகிறார்.

சர்க்காரியா நடத்திய விசாரணையில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். வழக்கமாக விசாரணை கமிஷன்களுக்கென்று ஒரு அளவுகோல் உண்டு. அந்த கமிஷனை அமைத்த ஆட்சியாளர்கள் என்ன விரும்புகிறார்களோ அவ்வாறே அறிக்கை கொடுப்பதற்கு வசதியாக நீதிமன்றங்களில் கடைப்பிடிக்கப்படும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற அளவுகோலைப் பின்பற்றாமல் தங்கள் இஷ்டத்திற்கு விசாரணையை நடத்துகிறார்கள்.

ஆனால் சர்க்காரியா, ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடித்தார். பூர்வாங்கமான ஆதாரங்கள் பல குற்றச்சாட்டுக்களில் இருந்தும், சந்தேகத்திற்கு இடமில்லாவகையில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்று பல குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.

இவ்வளவு சிறப்பாக விசாரணை நடத்தி, கொடுக்கப்பட்ட அறிக்கை அரசியல் காரணங்களுக்காக குப்பைத் தொட்டியில் போடப்பட்டது. நெருக்கடி நிலைக்குப் பிறகு, தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தது. இதனால் இந்த விசாரணைக் கமிஷனின் பரிந்துரையை குப்பையில் போட்டார் இந்திராகாந்தி.

அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்ன தெரியுமா..? தி.மு.க., இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்ததால், சர்க்காரியா விசாரணையை கல்லறைக்குள் புதைத்து கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார் இந்திரா. இன்றும் தி.மு.க. காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்கிறது. ஆனால் ஸ்பெக்ட்ரம் விசாரணையில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் அந்த அளவுக்கு உதவி செய்யவில்லை. மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் என்பது போல உதவி செய்கிறோம். ஆனால் செய்ய மாட்டோம் என்று தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்திரா. இவர் தந்திரா இல்லையா..?

உச்சநீதிமன்றம் என்ற ஒன்று மட்டும் இல்லாவிட்டால் ஸ்பெக்ட்ரம் விசாரணையும், சர்க்காரியா கமிஷன் அறிக்கை புதைக்கப்பட்ட அதே கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கும்.

புதைக்கப்பட்ட அந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை..!

உங்களுக்கு பரம்பரைக் கட்டிடம் ஒன்று இருக்கிறது.. அந்தக் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக ஒருவர் குடியிருக்கிறார். அந்தக் கட்டிடத்தில் வைத்து அவர் தொழில் செய்வதால், அவருக்கு மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால் உங்களுக்கு அவர் வருடத்துக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் வாடகை தருகிறார் என்றால் ஒப்புக் கொள்வீர்களா..? இதே கதைதான் சென்னை அண்ணா சாலையில் இருந்த க்ளோப் தியேட்டரின் கதையும்..

அண்ணா சாலை எல்.ஐ.சி. அருகே ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறதல்லவா? அது, முதலில் குளோப் தியேட்டராக இருந்து நியூ க்ளோபாக மாறி, பிறகு அலங்கார் தியேட்டராக மாறி இப்போது வணிக வளாகமாக ஆகியிருக்கிறது..

அந்தக் கட்டிடம் குஷால்தாஸ் என்பவரின் பரம்பரைச் சொத்தாகும். அந்தக் கட்டிடத்தை வரதராஜபிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால்தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால் தியேட்டர் நடத்துவதால் வரதராஜனுக்கு வாரந்தோறும் 8000 ரூபாய் வருமானம் வருகிறது. அதாவது ஆண்டுக்கு 4,14,000 ரூபாய் வரதராஜப் பிள்ளைக்குக் கிடைக்கும்.

இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை முடிவடைந்ததும் குத்தகையை புதுப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கிறார்.. வாரம் 8000 ரூபாய் வருமானம் பார்க்கும் வரதராஜபிள்ளை விடுவாரா? கட்டிடத்தை எனக்கே விற்றுவிடுங்கள் என்று அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்குச் செல்கிறது. ஊச்சநீதிமன்றம், குஷால்தாஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறது. அது மட்டுமில்லாமல், ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

கட்டிடத்தின் மீதிருந்த ஆசையால் சட்டத்தையே மாற்ற நினைத்த வரதராஜன், தி.மு.க. அரசின் அதிகார மையங்களை அணுகுகிறார். அப்போதெல்லாம் அமைச்சர்களும், அதிகார மையங்களாக இருந்தார்கள். முக்கிய அதிகார மையமாக முரசொலி மாறன் இருந்தார்.

சர்க்காரியா கமிஷனில் அளிக்கப்பட்டுள்ள சாட்சியங்களின்படி வரதராஜப் பிள்ளை முதலில் முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்குமாறு அறிவுறுத்துகிறார். ப.உ.சண்முகம், சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும் என்று தெரிவிக்கிறார். முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் ப.உ.சண்முகத்துக்கு கொடுக்கப்படுகிறது.

அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்த வரதராஜப் பிள்ளையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் வெறும் 40 ஆயிரம்தான் கொடுத்திருக்கிறீர்கள்.. சட்டத்தைத் திருத்த மேலும் 60 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்று கருணாநிதி கூறியதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் வரதராஜப் பிள்ளை தன்னிடம் 60 ஆயிரம் இல்லை என்றும், 30 ஆயிரம்தான் மேற்கொண்டு தர முடியும் என்றும் சொல்கிறார். அதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி 30 ஆயிரம் ரூபாயை ஒரு பழுப்பு நிறக் கவரில் வைத்து பெற்றுக் கொண்டதாகவும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாகவே மந்த கதியில் செயல்படும் அரசு இந்திரம் இந்தப் பணத்தைப் பெற்ற பிறகு மின்னல் வேகத்தில் செயல்பட்டது. உடனடியாக சட்டப் பேரவையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய வரைவுச் சட்டம் முதல் நாள்தான் கொடுக்கப்படுகிறது.

இதைப் பற்றி அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் ஹெண்டே, சர்க்காரியா கமிஷன் முன் சாட்சியம் அளித்தார். அவசரம், அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டு தபாலில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பினால் தாமதமாகும் என்று ஒரு அதிகாரி விமானத்தில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று வந்தார்கள். இந்தச்சட்டத் திருத்தத்தின் மூலம் ஒரிஜினல் உரிமையாளரிடம் சேர வேண்டிய சொத்து ஆட்டையைப் போட்டவருக்கு வந்து சேர்ந்தது. இத்தோடு இந்தக் கொடுமை முடியவில்லை..

இந்தச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் வரதராஜப் பிள்ளை நிலத்தை தான் நிர்ணயிக்கும் விலைக்கு தனக்கே விற்க வேண்டும் என்று மீண்டும் நீதிமன்றங்களை அணுகுகிறார். ஆனால் உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றம் செல்கிறார். அங்கே வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மீண்டும் தி.மு.க.வின் அதிகார மையத்தை அணுகுகிறார்.

அவரது விருப்பத்தின்படி, மீண்டும் இரண்டாவது முறையாக சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இது பற்றிக் குறிப்பிடும் சர்க்காரியா, “முதல் திருத்தத்தின் விளைவாக தனது நோக்கம் ஈடேற முடியாத வரதராஜ பிள்ளைக்காகவே இந்த இரண்டாவது திருத்தமும் செய்யப்பட்டது என்பதை இது வெளிப்படையாகக் காட்டுகின்றது” என்று கூறுகிறார்.

இந்த விசாரணையி்ன முடிவில், நீதிபதி சர்க்காரியா, “இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து விவாதித்து நிறைவேற்றுவதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும், உணவு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் ப.உ.சண்முகமும், சட்டத் துறை அமைச்சர் மாதவனும், வரதராஜப் பிள்ளைக்கு மறைமுகமாக உதவ வேண்டும் என்ற தீய நோக்கத்துக்காக உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று கூறுகிறார்.

சட்டமன்றத்தையும், சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் தனி நபரின் நலனைக் கருத்திக் கொண்டு தி.மு.க.வினர் எப்படியெல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்திருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா..?

இந்தக் கதை இன்றுவரை தொடர்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கிரவுண்டு நிலங்கள் மகாபலிபுரம் அருகே என்று அறிவித்தபோது மார்க்சிஸ்ட் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி அது நிறைவேற்றப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக ஆஜரானவர் பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன். ஆனால் தற்போது  உச்சநீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை ஒழுங்காக நடைபெறுவதற்கும், கருணாநிதியின் குடும்பத்தினர், சி.பி.ஐ.யால், விசாரிக்கப்படுவதற்கும் காரணமான முக்கியமான வழக்கை தாக்கல் செய்து அதில் வாதிட்டுவருவது இதே சாந்திபூஷனின் மகன் பிரசாந்த் பூஷன்தான் என்பது காலத்தின் கோலம்தானே..?🙏

No comments:

Post a Comment